Published : 07 Mar 2022 05:10 AM
Last Updated : 07 Mar 2022 05:10 AM

உதகையில் பல பகுதிகளில் வீசப்படும் குப்பை, கழிவுகள்: சுகாதாரமற்ற நகரமாக காணப்படும் சுற்றுலா நகரம்

சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், நகரத்திலும் சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் சுகாதாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் உதகை நகராட்சி பின்தங்கியுள்ளது.

குப்பைத் தொட்டிகள் அகற்றம்

பல வார்டுகளில் குடிநீர், சுகாதார பிரச்சினை இருந்து வருகிறது. வார்டுகளில் தேங்கியுள்ள குப்பைஅகற்றப்படாததால், காற்றில் பறந்து தெரு முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. குப்பைத் தொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளதால், அப்பகுதியிலேயே பொதுமக்கள் குப்பை கொட்டுகின்றனர். உணவு தேடி கால்நடைகள் அப்பகுதியை முற்றுகையிடுவதால், சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. குப்பைத் தொட்டிகள் இல்லாத நிலையில், பைகளில் அடைத்து அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி மற்றும் வனத்தில் வீசி செல்கின்றனர்.

கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். உதகை ஏ.டி.சி. அருகில் மத்தியப் பேருந்து நிலையம்செல்லும் சாலை, ஹெச்.ஏ.டி.பி. அரங்கம் செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகபகுதி, உதகை மகப்பேறு மருத்துவமனை, மார்க்கெட் மற்றும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள மறைவிடங்கள் உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதிலிருந்து கொசு உட்பட நோய் பரப்பும் கிருமிகள் உருவாகின்றன. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தியும் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், சுற்றுலா நகரம் சுகாதாரமற்ற நகரமாக காணப்படுகிறது.

சுகாதாரமே முதல் பணி

இதுதொடர்பாக உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் கூறும்போது, "உதகை நகருக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், நகரில் அடிப்படை வசதிகள் இல்லை. பல இடங்களில் குப்பை தேங்கி சுகாதார மற்ற வகையில் உள்ளது. கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.இதுவரை மக்கள் பிரதிநிதிகள் இல்லை. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலமாக மக்கள்பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் முதல் பணி நகரைசுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைப்பதுதான்" என்றார்.

தெருவில் வீசினால் நடவடிக்கை

நகராட்சி ஆணையர் காந்திராஜ் கூறும்போது, "திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடுகளுக்கே வந்து குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பையை தரம் பிரித்து மக்கள் அளிக்க வேண்டும். இதனால், நகரிலுள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், குப்பைத் தொட்டிகள் இருந்த இடத்தில் குப்பையை வீசி செல்கின்றனர். இதை தடுக்க, மக்கள் அதிகம் குப்பை கொட்டும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆலோசித்து வருகிறோம். குப்பையை தெருவில் வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x