Published : 28 Feb 2022 04:09 PM
Last Updated : 28 Feb 2022 04:09 PM

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க தனி அலுவலர் - வெளியுறவு அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: "உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும்" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும், இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதெனவும், விரைவில் அவர்கள் மீட்டுக்கொண்டு வரப்படுவார்கள் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் உறுதியளித்துள்ளார்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x