Published : 24 Feb 2022 06:53 PM
Last Updated : 24 Feb 2022 06:53 PM

உக்ரைனில் 5,000 தமிழக மாணவர்கள் தவிப்பு | பாதுகாப்பாக மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கோப்புப் படம்

சென்னை: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இன்று (24.2.2022) அதிகாலையில் ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடகச் செய்திகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த, தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளைத் தாம் பெற்றுவருவதால், அவர்களை அவசரமாக உக்ரைனிலிருந்து இந்தியாவிற்க அழைத்து வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையங்களைத் திறந்துள்ளது என்றும், மத்திய அரசு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கவும், தமிழர்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஏதுவாகவும், மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு அளவில் ஒருங்கிணைப்புப் பணிகளுக்கென்றே ஓர் இணைப்பு அலுவலரைத் தமிழ்நாட்டுக்கென்று அறிவிக்கலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும், முதல்வர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்துவர அந்நாட்டு அரசின் உயர்மட்ட அளவில் இப்பிரச்சினையை எடுத்துச் செல்லுமாறு மத்திய அரசை தாம் கேட்டுக்கொள்வதாகவும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலிருந்து “வந்தே பாரத்’’ மிஷன் போன்ற சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ளத் தாம் கோருவதாகவும் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x