Published : 13 Feb 2022 01:18 PM
Last Updated : 13 Feb 2022 01:18 PM

ஒரே தேர்தல் கொண்டு வந்தால் மாநில உரிமை பறிக்கப்படும்: மனித நேய மக்கள் கட்சி தலைவர் கருத்து

ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே ரேஷன் போன்று ஒரே தேர்தல் கொண்டுவந்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாதெரிவித்துள்ளார்.

சேலம் கோட்டை பகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. இதுவரை தடை செய்த வரலாறு கிடையாது. பல்வேறு மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக-வுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்க பாஜக-வின் சூழ்ச்சி தான் இது.

நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடவில்லை. அதிமுக தான் இரட்டைவேடம் போடுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தை அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், நீட் விவகாரத்தைப் பற்றி பேச அதிமுக-வுக்கு தகுதியில்லை.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக அதிமுக மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தால் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே ரேஷன் போன்று ஒரே தேர்தல் கொண்டுவந்தால் மாநில உரிமைகள் பறிக்கப்படும்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ‘ ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பதை கண்மூடித்தனமாக ஆதரித்து வருவது, அவரின் அடிமைத்தனத்தை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x