Published : 10 Jan 2022 09:58 AM
Last Updated : 10 Jan 2022 09:58 AM
தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, துணிப் பைகளை பயன்படுத்தும் வகையில், ‘மீண்டும் மஞ்சள் பை’ இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார்.
அரசின் இந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் கோவை ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதிகளைச் சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரிகள், தங்களிடம் காய்கறிகள், பழங்களை வாங்க துணிப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிலோவுக்கு ரூ.5 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு பலகையை அவர்கள் தங்கள் தள்ளுவண்டிகளில் வைத்துள்ளனர்.
இந்த முன்மாதிரி முயற்சி குறித்து ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துவரும் நடராஜ் கூறியதாவது: முதலில் நண்பர்கள் 10 பேர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.
தற்போது 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதில் இணைந்துள்ளனர். மற்ற கடைகளில் என்ன விலைக்கு பொருளை விற்கிறார்களோ அதேவிலைக்குதான் இங்கு பொருட்களை விற்பனை செய்கிறோம். நல்ல நோக்கத்துக்காக எங்கள் லாபத்தின் ஒருபகுதியை குறைத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இதே தள்ளுபடியை 3 முதல் 4 மாதங்கள் வரை தொடர்ந்து நாங்கள் கடைபிடிக்கும்போது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் துணிப்பைகளுக்கு மாறிவிடுவார்கள். அதன்பின், மீண்டும் நாங்கள் பழையபடி தள்ளுபடி இன்றி விற்பனை செய்ய தொடங்கிவிடுவோம். தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு வாடிக்கையாளர்களில் பலரிடம் மாற்றத்தைக் காண முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT