Published : 03 Jan 2022 09:30 AM
Last Updated : 03 Jan 2022 09:30 AM
குன்னூர்- மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாறைகளை அகற்றி, மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மலைகளை குடைந்தும், ஆறுகளின் மீது பாலங்கள் அமைத்தும் சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மலைப்பாதையாக உள்ளது. குறுகலான இந்த சாலையில் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில் சாலை விரிவாக்கப் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 14 இடங்களில் சாலை விரிவாக்கப் பணி, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம்களில் பெய்த கன மழையால் சாலையோரத்தில் பாறைகள் சரிந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. காட்டேரி முதல் மரப்பாலம் இடையேயுள்ள சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில், சாலையோரத்தில் பாறைகள் கிடக்கின்றன. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. தற்போது, குன்னூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், சாலையின் மேற்புறத்திலுள்ள பாறைகள் விழும் அபாயத்தில் உள்ளன. எனவே, மேற்கண்ட பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT