Published : 02 Jan 2022 06:26 AM
Last Updated : 02 Jan 2022 06:26 AM
நேரடி நியமன குளறுபடியால் 16 மாவட்டக் கல்வி அதிகாரிகள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளது பள்ளிக்கல்வி துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 16 பேருக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகளாக கடந்த பிப்ரவரியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பொறுப்பேற்று 10 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் திடீரென அவர்கள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கல்வித் துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்கள் 75 சதவீதம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், மாவட்டக் கல்வி அதிகாரி பணியில் இருந்த 20 காலி இடங்களை நிரப்பும் பொறுப்பு கடந்த2018-ல் டிஎன்பிஎஸ்சிக்கு வழங்கப்பட்டது.
அதிகாரிகள் 58 வயதில் ஓய்வு பெற உள்ளதை கணக்கில் கொண்டு காலி இடங்கள் பட்டியலை கல்வித்துறை தயாரித்திருந்தது. இந்த சூழலில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை தமிழக அரசு 60 ஆக உயர்த்தியது. இதனால், மாவட்டக் கல்வி அதிகாரி பணியில்எதிர்பார்த்த காலி இடங்கள் உருவாகவில்லை. அதேநேரம், திட்டமிட்டபடி 20 பேரை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் தேர்வு செய்துவிட்டது.
இந்த நிர்வாக குளறுபடியை சமாளிப்பதற்காக, பதவி உயர்வில்சென்ற 16 மாவட்டக் கல்வி அதிகாரிகள் மீண்டும் தலைமை ஆசிரியர் பணிக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். பயிற்சி முடிந்து 10 மாதங்கள் பணியாற்றிவிட்ட சூழலில், மாற்று வழிகள் இருந்தும் கல்வித் துறை இவ்வாறு முடிவெடுத்தது ஏற்புடையது அல்ல. இதை எதிர்த்துவழக்கு தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுபற்றி பள்ளிக்கல்வி துறைஉயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பதவி உயர்வு தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டது. எனவே, பணி இறக்கம் செய்ததில் விதிமீறல் எதுவும் இல்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT