Published : 31 Dec 2021 10:06 AM
Last Updated : 31 Dec 2021 10:06 AM

அதிமுக-வை ஸ்டாலினால் அழிக்க முடியாது: ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு

தருமபுரி

கருணாநிதியால் அழிக்க முடியாத அதிமுக-வை அவரது மகனாலும் அழிக்க முடியாது என தருமபுரியில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு நேற்று தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:

தருமபுரியில் அதிமுக-வுக்கென கடந்த 2006-ம் ஆண்டு கட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் ஒருபோதும் விசாரணை போன்ற காரணங்களுக்காக அரசு அலுவலர்கள் இந்த அலுவலக வளாகத்துக்குள் நுழைந்ததில்லை. ஆனால், தற்போது விருதுநகர் மாவட்ட போலீஸார் தருமபுரி அதிமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தருமபுரி மாவட்டத்தில் இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட போலீஸார் தருமபுரி மாவட்ட அதிமுக-வினரையும், அவர்களின் குடும்பத்தாரையும் துன்புறுத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களையும் அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இந்த செயல் கண்டனத்துக்கு உரியது. தருமபுரி எப்போதும் அதிமுக-வின் கோட்டையாக இருந்து வருகிறது. திமுக-வை வளர்க்கும் நோக்கத்துக்காக இந்த அரசு அதிமுக மீது வீண்பழி சுமத்தி வருகிறது. அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க அன்றைய முதல்வர் கருணாநிதியாலேயே முடியவில்லை. அவரது மகனான ஸ்டாலினாலும் அதிமுக-வை அழிக்க முடியாது.

இவ்வாறு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோவிந்த சாமி(பாப்பிரெட்டிப் பட்டி), சம்பத்குமார்(அரூர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x