Published : 29 Dec 2021 05:46 AM
Last Updated : 29 Dec 2021 05:46 AM

ஐடி படிவம் தாக்கல் செய்ய டிசம்பர் 31 கடைசி- இதுவரை 4.67 கோடி பேர் ரிட்டன் தாக்கல்

புதுடெல்லி

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு (டிசம்பர் 31) முடிகிறது.

இந்நிலையில் டிசம்பர் 27-ம் தேதிமட்டுமே 15.49 லட்சம் எண்ணிக்கையில் வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரையில் 4.67 கோடிக்கு மேற்பட்ட அளவில் வருமான வரி ரிட்டன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2020 -21-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு இவ்வாண்டு ஜூலை மாதம்31 வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதுசெப். 30 வரையில் நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில் மத்திய அரசுஅறிமுகப்படுத்திய புதிய வருமானவரி தளத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதனால், மக்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரையில் மொத்தமாக 4.67 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2.50 கோடி விண்ணப்பங்கள் ஐடிஆர் 1 வகையின் கீழும், 1.70 கோடி விண்ணப்பங்கள் ஐடிஆர் 4 வகையின் கீழும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x