Published : 29 Dec 2021 06:41 AM
Last Updated : 29 Dec 2021 06:41 AM
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜன.3 முதல் ஆன்லைன் விசாரணை கிடையாது என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தஆண்டு மார்ச் மாத கடைசி வாரம்முதல் நேரடி விசாரணை நடைமுறை நிறுத்தப்பட்டு, வழக்குகள் ஆன்லைனில் காணொலி காட்சி வாயிலாக நடந்து வந்தது.
ஊரடங்கு தளர்வுகள்
பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால் வழக்குகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதையடுத்து, அந்த வழக்கறிஞருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அந்த வழக்கறிஞர் வரும் ஜன.20-ல் நேரில் ஆஜராகவும், அவர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் வேண்டுகோள்
அத்துடன், உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணையை நிறுத்திவிட்டு வழக்கமான நடைமுறையில் நேரடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிபதிகள், பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் விடுத்த அறிக்கையில், ‘சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் ஜன.3 முதல்ஆன்லைன் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. வழக்குகள் வழக்கமான முறையில் நேரடியாக விசாரிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT