Published : 29 Dec 2021 07:04 AM
Last Updated : 29 Dec 2021 07:04 AM
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அலுமினியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் கிராம மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதால், உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டி பிள்ளைப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன், காஞ்சி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்திருந்தார் மேலும் இது தொடர்பான செய்தி 'இந்து தமிழ்' நாளிதழில் ஏற்கெனவே வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அந்த அலுமினியம் தயாரிக்கும் தொழிற்சாலை அருகில் உள்ள பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்,நடமாடும் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் மூலம் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு குறித்த ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளனர்.
தொழிற்சாலையில் இருந்துவெளியாகும் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு,காற்றில் மிதக்கும் துகள்கள் மற்றும்சுவாசிக்கக் கூடிய அளவுள்ள துகள்கள் ஆகிய 4 அம்சங்கள் அளவிடப்படுகின்றன. மேலும் இந்தக் கருவி மூலம் காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரான் அளவுக்கு குறைவான அளவுள்ள துகள்கள், 10 மைக்ரான் அளவுக்கு குறைவான அளவுள்ள துகள்கள் அளவுகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த நடமாடும் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் மூலம் தொழிற்சாலையை சுற்றி ஒருவார காலம் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுக்கு தினமும் செலவாகும் ரூ.1.5 லட்சத்தை தொழிற்சாலை நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். ஆய்வின் முடிவில் தவறு இருக்கும் பட்சத்தில், தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், இதே தொழிற்சாலை விதிகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT