Published : 29 Dec 2021 07:29 AM
Last Updated : 29 Dec 2021 07:29 AM

தேனியில் கேரள வியாபாரிகள் கரும்பு கொள்முதல்: கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு

உத்தமபாளையம் பகுதியில் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள கரும்புகள்

உத்தமபாளையம்

கரும்பு கொள்முதல் செய்வதற்காக கேரள வியாபாரிகள் தேனி மாவட்டத்துக்கு வரத் தொடங்கி உள்ளனர். மேலும் தமிழகத்தில் பொங்கலுக்கு கரும்பின் தேவை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் தேவதானப் பட்டி, கோட்டூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் கரும்பு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளது.

பத்து மாத பயிரான கரும்பு தற்போது மகசூலுக்கு ஏற்ற தருணத்தில் உள்ளது. பொங்கலுக்கு சில வாரங்களே உள்ளதால் கரும்புகளை விவசாயிகள் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். இதற்காக வயல் ஓரங்களில் சிறு குடில்கள் அமைத்து சில்லரை விலைக்கு துண்டுக் கரும்புகளை விற்று வருகின்றனர்.

கேரளாவில் ஜனவரி முதல் தேதியில் கரும்பின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் அங்கிருந்து வியாபாரிகள் வரத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு வயல்களிலும் விளைந்துள்ள கரும்புகளை பார்வையிட்டு முன்பணம் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல் தினங்களில் கரும்பு களின் தேவை அதிகம் இருக்கும். இதனால் திருப்பூர், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விரைவில் வர வாய்ப்புள்ளது.

இது குறித்து கோட்டூரைச் சேர்ந்த விவசாயி ராபின் கூறுகையில், ஒரு கரும்பு ரூ.30-க்கு விற்பனை செய்கிறோம். கேரள வியாபாரிகள் தற்போதுதான் வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இம்முறை விளைச்சல் கூடியுள்ளது. விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்

விவசாயி சதானந்தவேலு கூறுகையில், உரம், தண்ணீர் பாய்ச்சுதல், சோகை உரித்தல் என்று அனைத்து பணிகளுக்கும் கூலி அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழையால் வயலை சரி செய்ய கூடுதல் செலவு ஏற்பட்டது. ரேஷனில் கரும்பு வழங்குவதால் கரும்பின் தேவை அதிகரிக்கும். இதனால் கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x