Published : 12 Jun 2014 09:00 AM
Last Updated : 12 Jun 2014 09:00 AM

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளதா?- அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மரியா லூயிஸ் என்ற ராணுவ வீரர் பணியின் போது மரணமடைந்தார். கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரி சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மரியா லூயிஸின் மனைவி கோரிக்கை மனு அனுப்பினார். இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், மனுதாரரை வருவாய் உதவியாளராக பணியமர்த்தும்படி சேலம் மாநகராட்சி ஆணையரைக் கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்க மறுத்த ஆணையர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கு வதற்கான திட்டம் எதுவும் அமலில் இல்லை என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மரியா லூயிஸின் மனைவி, தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி எஸ்.நாக முத்து முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஜூன் 23-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x