Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

முதல்கட்டமாக 2,100 அரசு பேருந்துகளில் ‘பேனிக் பட்டன்’ வசதி ஏற்படுத்தப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை

தமிழக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நிர்பயா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, ஒவ்வொரு பேருந்திலும் அவசர அபாய ஒலி எழுப்பும் வசதி அமைக்கப்படுகிறது.

இதன்மூலம், பணிமனைக்கு உடனடியாக தகவல் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக 2,100 அரசுப் பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும், அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்களை சில நடத்துநர்கள் இறக்கி விடும் சூழல்உள்ளது. இது தொடர்பாக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படும்.

மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதை தடுக்க கூடுதல் பேருந்துகளை இயக்கவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், ஆய்வு நடைபெற்று வருகிறது.

தீபாவளிப் பண்டிகையைபோல, பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x