Published : 23 Jun 2014 12:49 PM
Last Updated : 23 Jun 2014 12:49 PM
மாணவர்களை ஊக்குவிக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாநில அளவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றான இளைஞர் அணி சார்பில் 2013-14-ம் கல்வி ஆண்டில் தமிழகம், புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இளைஞர் அணி கட்சிக்கு மட்டும் பணியாற்றிக் கொண்டிருக்காமல், பொது காரியங்களில், குறிப்பாக நாட்டில் உள்ள இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இளைஞர் அணி அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் 6-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
அடுத்த ஆண்டு முதல் வைப்புத் தொகையை அதிகப்படுத்தி மாநில அளவில் மட்டும் இல்லாமல் மாவட்ட அளவிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மாணவர்களைச் சுற்றி அரசியல் இருந்தாலும், இந்த நாட்டுக்கு ஆற்ற வேண்டிய அரசியல் பணிக்கு மாணவர்கள் முன்வர வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களை அரசியலுக்கு அழைக்கிறோம் எனக் கருத வேண்டும். ஆனால், அரசியல் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்து சமூகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT