Published : 20 Jun 2014 09:19 AM
Last Updated : 20 Jun 2014 09:19 AM

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆராய ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நடந்த தீ விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி கும்பகோணம் பள்ளி தீ விபத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனினும் அதன் பிறகும் கூட நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி இன்னொரு மனுவை இன்பராஜ் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து இந்த வழக்கின் விசார ணையை மூன்று வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x