Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘வந்தேபாரத்’ விரைவுரயில் பிரிவில் மேலும் 58 ரயில்களைதயாரிக்க இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் 44 ரயில்களின் தயாரிப்பு பணி டிசம்பரில் தொடங்க உள்ளது.
சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-பில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரயில் 18’ அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேகரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டு டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.இந்த ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பயணிகள் சொகுசாக பயணிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் இந்த ரயிலின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் 3 இடங்களில் இருக்கும் ரயில்வே தொழிற்சாலைகளில் புதிய வகையில் 75 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்கப்படும் எனரயில்வே அறிவித்தது. இதில், சென்னை பெரம்பூர் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 44 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, தற்போது இந்த பிரிவு ரயில்களில் மேலும் 58 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்க இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே இருக்கும் ஓதுக்கீட்டின்படி,சென்னை ஐசிஎஃப்-ல் 44 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. அதன்படி, முதல் ரயில் தயாரிப்பு பணி வரும் டிசம்பரில் தொடங்கப்படும். இப்பணி அடுத்த ஆண்டு மார்ச்சில் முடிக்கப்படும். புதிய டெண்டர் மூலமாகவும் கூடுதல் ரயில்கள் தயாரிக்க ஐசிஎஃப்-க்கு வாய்ப்பு கிடைக்கும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT