Published : 02 Jul 2021 03:15 AM
Last Updated : 02 Jul 2021 03:15 AM

ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் அதிகரிப்பு: தடுப்பூசி போடும் பணிகளில் கால்நடைத்துறை தீவிரம்

வீரவநல்லூர் வெள்ளங்குளியில் கன்னடியன் கால்வாய் கரையோர மேய்ச்சல் நிலங்களில் பசியாறும் ஆடுகள். (வலது) தள்ளாடியபடி மந்தையைப் பின்தொடரும் அம்மை நோய் தாக்கிய ஆடு. படங்கள் மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அம்மை நோய் தாக்குதலால் ஆடுகள் உயிரிழப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளைப்போல், ஆடு, மாடுகளை வளர்க்கும் தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட மேய்ச்சலுக்கு உகந்த பகுதிகள் கால்நடை வளர்ப்போருக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நாங்குநேரி, அம்பாசமுத்திரம் வட்டாரங்களில் ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேர்ந்து வருவதால் கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.

வீரவநல்லூர் அருகே வெள்ளாங் குளியில் ஆடு வளர்க்கும் கே.சேது கூறும்போது, ஆட்டம்மை நோய் தாக்குதலால் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் இதுவரை இறந்துவிட்டன. நோய் தாக்குதலுக்கு உள்ளான ஆடுகள் சரிவர மேய்வதில்லை. மூக்கில் சளி வடிவதால் மற்ற ஆடுகளுக்கும் எளிதாக நோய் பரவிவிடுகிறது. கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசிகள் போடப்பட்டும் பயன் ஏற்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

இதுபோல், அம்பாசமுத்திரம் அருகே செம்பத்திமேடு பகுதியிலும் அம்மை நோய் தாக்குதலால் ஏராளமான ஆடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்குமுன் நாங்குநேரி பகுதியில் நோய் தாக்குதலால் ஏராளமான ஆடுகள் திடீரென்று உயிரிழந்தன.

இதுகுறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் ஆட்டம்மை நோய் பாதிப்புள்ள பகுதிகளில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. நோய் தாக்குதல் குறித்த தகவல் வந்தால் உடனே அப்பகுதிகளுக்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவகை வைரஸ் காரணமாக ஆடுகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான ஆடுகளின் உடலின் மேற்பகுதியில் கொப்பளங்கள் ஏற்பட்டால் ஓரளவுக்கு அவற்றை பிழைக்க வைத்துவிடலாம்.

ஆனால், உடலின் உள் பகுதியில் உணவுக் குழாய், நுரையீரல் பகுதிகளில் கொப் பளங்கள் உருவானால் அவற்றை காப்பாற்றுவது கடினமாகிவி டுகிறது. நோய் தாக்குதலுக்குப்பின் ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதைவிட முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆடுகளை வளர்ப்போர் முன்வர வேண்டும். ஆனால், இதுகுறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. கால்நடைகளுக்கு வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று தெரிவித்தனர்.

ஆட்டம்மை நோய் தாக்கு தலுக்கு முன்னரே ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x