Published : 14 Jun 2014 08:32 AM
Last Updated : 14 Jun 2014 08:32 AM

கர்நாடகத்தின் புகாருக்கு ஜெயலலிதா பதில்

காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* காவிரி நடுவர் மன்றம் கர் நாடகத்துக்குத் தேவையான அளவை காட்டிலும் அதிகளவு தண் ணீரை ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசனப்பகுதி போன்றவற்றை நடுவர் மன்றம் கருத்தில்கொள்ளவில்லை. அதன் காரணமாகத்தான் நடுவர் மன்ற உத்தரவை எதிர்த்து தமிழகம் மேல்முறையீடு செய்தது.

* காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட வேண்டும் என்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின் ஓர் முக்கிய அம்சம் ஆகும். இதனால், நிலுவையில் உள்ள வழக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒரு தடையாக இருக்காது.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு அர்த்தமற்றதாகிவிடும். அந்த உத்தரவு காகிதத்தில் பெயரளவில் மட்டுமே இருக்கும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. எனவே, இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட வாரியம் மற்றும் குழுவை அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடந்த 2012-2013-ம் ஆண்டு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரில் 58 டிஎம்சி தண்ணீர் வந்து சேரவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் காலத்தில் காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, கர்நாடகம் அரசு கடந்த ஆண்டு செயல்படவில்லை. இத்தகைய போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைத்தாக வேண்டும்.

* உச்சநீதிமன்ற ஆலோசனைப் படி அமைக்கப்பட்ட தற்காலிக கண்காணிப்புக்குழு நீண்ட காலம் செயல்பட்டால், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்த தாமதம் ஏற்படும். காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைக்காவிட்டால், நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டும் நடுவர் மன்ற தீர்ப்பு வெறும் கனவாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x