Published : 04 Dec 2015 10:09 AM
Last Updated : 04 Dec 2015 10:09 AM
*
சென்னையில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்பதற்காக மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக் குழு அனுப்பிவைத்துள்ளது. முழுமையான செய்தி: >|கூடுதலாக 20 குழுக்களை அனுப்பியது தேசிய பேரிடர் மீட்புக் குழு: இதுவரை 10,000 பேர் மீட்பு|
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழுமையான செய்தி: >தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அரசும், தனியார் அமைப்புகளும், தனி நபர்களும், தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
சென்னையில் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களின் வசதிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | விவரம்: >சென்னை மாநகர பஸ்களில் 4 நாட்களுக்கு கட்டணம் இல்லை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
முந்தையச் செய்திப் பதிவுகள்:
8.55pm: தனியார் மருத்துவமனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?- தமிழக அரசு விளக்கம்
''ஊடகங்கள் இந்த 14 உயிரிழப்புகளை மின் இழப்பு காரணமாக ஏற்பட்டது என்று மிகைப்படுத்தி வந்ததால் இந்த உண்மை நிலவரத்தை விளக்குகிறோம்'' என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முழுமையான அறிக்கை >தனியார் மருத்துவமனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?- தமிழக அரசு விளக்கம்
7.50 pm: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்க மத்திய அரசு உத்தரவு
தமிழகத்தில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முழுமையான செய்திக்கு: >தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்க மத்திய அரசு உத்தரவு
5.05 pm: சென்னை தாம்பரம், முடிச்சூர் மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
சென்னையில் பலத்த மழை தொடர்ந்தால் மீண்டும் ஏரிகளில் இருந்து நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே,தாம்பரம், முடிச்சூர் மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4.20 pm: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்பதற்காக மேலும் 20 குழுக்களை தேசிய பேரிட மீட்புக் குழு அனுப்பிவைத்துள்ளது. >|கூடுதலாக 20 குழுக்களை அனுப்பியது தேசிய பேரிடர் மீட்புக் குழு: இதுவரை 10,000 பேர் மீட்பு|
3.55 pm: தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
3.50 pm: சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இலவசமாக பஸ் வசதி செய்வது தொடர்பாக இன்று (4.12.2015) மாலைக்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விரிவான செய்திக்கு: >|சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இலவச பஸ் வசதி: உடனடி முடிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு|
3.40 pm: சென்னை மழை வெள்ளம் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டியதை உணர்த்தியிருப்பதாக பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு >|சென்னை மழை வெள்ளம் உலகுக்கு ஓர் எச்சரிக்கை மணி: பிரான்ஸ் அமைச்சர் கருத்து| |
2.50 pm: சென்னையில் கிண்டி, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்கிறது. இருப்பினும் மீட்பு, நிவாரணப் பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன.
2.30 pm: மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டுள்ள தமிழக அரசையும், மத்திய அரசையும் பாராட்டுவதாக தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு ஆதரவாக நம்பிக்கை தெரிவித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
2.15 pm: சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 9 ஆண்கள் 5 பெண்கள் உட்பட 14 நோயாளிகள் பலியாகினர். >|சென்னை தனியார் மருத்துவமனையில் 14 நோயாளிகள் பலி|
1.45 pm: சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி அருகேவுள்ள கவிஞர் பாரதிதாசன் சாலையில் இன்னும் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் அந்த வழியாக போக்குவரத்து சாத்தியமில்லை.
1.35 pm: சென்னை தியாகராய நகர் பகுதிகளில் மழை நீர் சூழப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவகத்தில் இரண்டாவது நாளாக இன்று மதியம் 2 மணியளவில் உணவு வழங்கப்படுகிறது.
1.15 pm:திருச்சிராப்பள்ளி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில் இன்று பகல் 2 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
12.55 pm: கடலூரில் 15 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை 10.30 மணி முதல் வெயில் அடித்து வருகிறது. நிவாரணப் பொருட்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த வண்ணம் உள்ளது. அதை விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது. விரிவான செய்திக்கு: >| கடலூரில் 15 நாளுக்குப் பின் வெயில்: நிவாரணப் பணி துரிதம் |
12.40 pm: 'ஆவின் பால்' தங்குதடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக சென்னை மாநகர மற்றும் புறநகரப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் 98403 87510, 98409 07494, 94439 44908 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்- செய்தி மக்கள் தொடர்புத் துறை. |
12.30 pm:நாளை (05.12.2015) இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்கள்: சென்னை கடற்கரை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (காட்பாடி, விழுப்புரம், திருச்சிராபள்ளி, மதுரை வாயிலாக) நாளை பகல் 12.30 மணிக்கு புறப்படுகிறது. சென்னை கடற்கரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (காட்பாடி, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி வாயிலாக) நாளை பகல் 12.30 மணிக்கு புறப்படுகிறது. |
12.10 pm: இன்றைய ( 04.11.2015 ) சிறப்பு ரயில்கள்: 1. திருநெல்வேலி - சென்னை கடற்கரை இடையேயான ரயில் (மதுரை, காட்பாடி, திருச்சி வாயிலாக) இன்று இரவு 8 மணிக்கு புறப்படும். 2. ராமேஸ்வரம் - சென்னை கடற்கரை இடையேயான ரயில் (சேலம், காட்பாடி, காரைக்குடி வாயிலாக) இன்று இரவு 9 மனிக்கு புறப்படும். 3. மங்களூரு - அரக்கோணம் சிறப்பு ரயில் ( கோழிக்கோடு - சோரனூர் - கோயமுத்தூர் வாயிலாக) இன்று இரவு 8 மணிக்கு புறப்படும். |
12.00 pm: சென்னையில் மழை வெள்ளத்தால் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பால், தண்ணீர், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், எண்ணெய் டேங்கர் லாரிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது.
11.45 am: கடற்படைக்குச் சொந்தமான அரக்கோணம் விமான தளத்திலிருந்து இன்று வெளியூர்களுக்குச் செல்ல 7 பயணிகள் விமானங்களுக்கு கடற்படை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, ட்ரூஜெட் (ஹைதராபாத்-அரக்கோணம்-ஹைதராபாத்) 0830/0855 , ஸ்பைஸ்ஜெட் (கொச்சின்-அரக்கோணம்-பெங்களூரு) 0945/1115 & (கொச்சின்-அரக்கோணம்-பெங்களூரு) 1500/1630, இண்டிகோ (ஹைதராபாத் - அரக்கோணம்- பெங்களூரு) 1130/1300 & (பெங்களூரு- அரக்கோணம்- டெல்லி) 1645/1815, ஏர் இந்தியா (ஹைதராபாத்-அரக்கோணம்-ஹைதராபாத்) 1315/1445 & (ஹைதராபாத்-அரக்கோணம்-பெங்களூரு) 1830/1945 ஆகிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.
11.35 am: சென்னை - பெங்களூரு இடையே இன்று ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06504 சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட் வழியாக பெங்களூரு செல்லும்.
11.30 am: சென்னையில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து இதுவரை 62,267 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கனமழையால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மழை விட்டுவிட்டு பெய்துவரும் நிலையில் தேங்கியுள்ள நீரின் அளவு புதன்கிழமையைவிட நேற்று மேலும் அதிகரித்தது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு, உடமைகளுடன் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
அடையாறு, கூவம் மற்றும் பல்வேறு கால்வாய்களின் ஓரங்களில் வசித்து வந்தவர்கள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து வெளியேறியவர்கள் என நேற்றைய நிலவரப்படி மொத்தம் 62,267 பேர் மீட்கப்பட்டு, 97 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை மீட்கும் பணியில் 104 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பல்வேறு வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், வெளியில் வரமுடியாமல் உள்ள 17 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நீருக்குள் மூழ்கிய பம்புசெட்டுகள்
சென்னை மாநகரப் பகுதியில் கனமழையை ஒட்டி, தேங்கும் நீரை வெளியேற்றுவதற்காக 470 பம்பு செட்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தொடர்ந்து வெள்ள நீர் பாய்ந்துக்கொண்டு இருக்கிறது. மாநகரெங்கும் மழை நீர் தேங்குவதால், தாழ்வான பகுதியை அறிந்து மழைநீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரிய பம்பு செட்டுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. அதனால் அவற்றை இயக்கி நீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அரசு நிவாரண முகாம்கள் பட்டியலைப் பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்: >Relief Centres as on - Dt. 02.12.15 @12.00AM |
சென்னையில் தகவல் தொடர்பு, மின் விநியோகம் பாதிப்பு:
சென்னையில் தகவல் தொடர்பு மற்றும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் மாநகரம் முழுவதும் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிய முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் தவித்து வருகிறது.
சென்னையில் பெய்த கனமழையால் செல்போன்கள் செயலிழந்துள்ளன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையை மழைநீர் சூழ்ந்துள்ளதால், பிளாஸ்டிக் பைப் சுருளைக் கொண்டு மிதவை ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலமாக மாநகராட்சி ஊழியர்கள் ரிப்பன் மாளிகைக்கு வந்து செல்கின்றனர். மதிய உணவு உள்ளிட்டவை, மிதவை மூலமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது.
விவரங்களைப் பெறுவதில் சிக்கல்
மாநகரம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக முழுமையாக விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு 6 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு, முழுமையான தகவல்கள் கிடைக்காததால், பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT