Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM
சேலத்தில் சொத்துப் பிரச்சினையில் அண்ணனை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பெரிய புத்தூர் சந்தகரடு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவவர் ராஜகவுண்டர். இவரது மனைவி பெரியதாய் (70). இவர்களுக்கு 5 மகள் மற்றும் 4 மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் செல்வம் (46). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்கள் இரும்பாலை அருகே சித்தூர் தெற்கு தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
செல்வத்தின் தம்பி சந்தோஷ் (35). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மீது கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. தாய் வீட்டுக்கு எதிரில் உள்ள வீட்டில் இவர் வசித்து வருகிறார். இவருக்கும் செல்வத்துக்கும் இடையே சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், செல்வம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான போலீஸார், செல்வத்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நேற்று காலை செல்வம் தனது தாயை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, எதிர் வீட்டில் இருந்து சந்தோஷ் ஜன்னல் வழியாக நாட்டு துப்பாக்கியால் செல்வத்தை சுட்டுக் கொன்றது தெரிந்தது.
இதையடுத்து, சந்தோஷை போலீஸார் கைது செய்து, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT