Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM
தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் மேலும் 36 மாணவிகள், ஓர் ஆசிரியைக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அப்பள்ளியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆனது. இதையடுத்து, அப்பள்ளியை பார்வையிட்ட ஆட்சியர், கரோனா பரவியது தொடர்பாக ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அந்தமாணவியின் வகுப்பில் உள்ள 460மாணவிகளுக்கு கடந்த 11-ம்தேதி கரோனா பரிசோதனைசெய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. இதையடுத்து,அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.
அதேபோல, கடந்த 12-ம் தேதி மற்ற வகுப்பு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், மேலும் 36 மாணவிகளுக்கும், ஒருஆசிரியைக்கும் கரோனா தொற்றுஇருப்பது உறுதியானது. அவர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் தொற்று உறுதியாகியிருப்பதால், ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று அந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:
பள்ளிக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவிகள் 24 கிராமங்களிலிருந்து வருவதால், அந்தந்தகிராமங்களிலும், பள்ளி உள்ளபகுதியிலும் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாணவிகளின்பெற்றோர், தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தப் பள்ளியில் திடீரென எப்படி இவ்வளவு பேருக்கு கரோனாதொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டாட்சியர் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது. இவர்கள் உடனடியாக ஆய்வு செய்து, விரைந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டு, பள்ளிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT