Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM
திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174-ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று மாலை தொடங்கியது. இன்று (பிப்.2) பஞ்சரத்ன கீர்த்தனையால் இசையஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 174-ம் ஆண்டு ஆராதனை விழாவை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், சபா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
ஆட்சியர் ம.கோவிந்தராவ் பேசியபோது, ‘‘உலகப் புகழ் பெற்ற இவ்விழாவால் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பெருமை. கரோனா தொற்று காலத்திலும் இந்த விழாவை நிச்சயம் நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் விழா நடத்தப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இடத்தில் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை உலகம் முழுவதும் உற்றுநோக்குகின்றனர். ஆண்டுதோறும் இவ்விழாவை சிறப்பாகவும், தனித்துவத்துடனும் சபாவினர் நடத்தி வருகின்றனர்’’ என்றார்.
சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி பேசியதாவது:
தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா கரோனா காலத்திலும் தடைபடாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக, சரியான கோட்பாடுகளையும், வழிகாட்டுதலையும் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. அதன்படி, இவ்விழா தியாகராஜ சுவாமிகளின் அருளால் சிறப்பாக தொடங்கியுள்ளது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் வந்திருந்து, ஒன்றுசேர பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடியும், இசைத்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர்.
வழக்கமான 5 நாட்கள் நடைபெறும் இவ்விழா, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டும் நடைபெறுகிறது.
இவ்விழா மிகவும் தனித்துவமானது. கர்னாடக சங்கீத உலகில்தனக்கென தனி இடத்தை பெற்றவர் தியாகராஜ சுவாமிகள். ஆராதனை விழாவில், இந்தியாவில் உள்ள இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இசையஞ்சலி செலுத்துவது தியாகராஜ சுவாமிகளுக்கு செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். சபா செயலாளர் ராஜாராவ் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் நேற்று இரவு 8 மணி வரை நடைபெற்றன. விழாவில், இன்று(பிப்.2) காலை 9 மணி முதல் 10 மணி வரை இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனையை பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT