Published : 19 Jun 2014 02:16 PM
Last Updated : 19 Jun 2014 02:16 PM

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது: விரைவு நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட 46 தமிழக மீனவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 11 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்: "தமிழக மீனவர்கள் 46 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மிகுந்த வேதனையுடன் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.

நேற்று (18-ம் தேதி) 6 விசைப்படகுகளில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர்மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கை காங்கேசந்துரை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேபோல், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கு முன்னர் இரண்டு முறை இதேபோன்று மீனவர்கள் கைது குறித்து கடிதம் எழுதியபோது துரிதமாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் விடுதலை செய்ய வழிவகுத்தீர்கள். அந்த நடவடிக்கை தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

கடந்த 4-ம் தேதி மீனவர் பிரச்சினை தொடர்பாக நீங்கள் எழுதிய பதில் கடிதத்தில், மீனவர்களை விடுவிப்பதில் தமிழக அரசும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தீர்கள். அதற்கிணங்கி, இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுவித்தது. ஆனால், நல்லுறவை சிதைக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் அப்பாவி மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 46 பேரையும் அவர்களது 11 படகுகளையும், இதற்கு முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட 23 படகுகளையும் விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x