Published : 03 Jan 2021 09:52 AM
Last Updated : 03 Jan 2021 09:52 AM

திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் போட்டியிட முயற்சிக்கும் மார்க்சிஸ்ட் 

திண்டுக்கல் 

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முயற்சியாக மக்கள், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல, வழக்கத்தை விட அதிக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் கடந்த சட்டபை தேர்தல்களில் இதுவரை திண்டுக்கல், பழநி ஆகிய தொகுதிகளில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப் பட்டுள் ளனர். இதில் திண்டுக்கல் தொகுதியில் தொடர்ந்து 3 முறை ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி.
கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் திண்டுக்கல், பழநி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. இந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி திண்டுக்கல் அல்லது பழநி தொகுதியை எதிர்பார்த்து காத்துள்ளது. இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது கட்சித் தலைமை. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கரோனா காலத்தில் கட்டுப்பாடு இருந்த நிலையிலும் பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்தினர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து தொடர்ந்து தினமும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். வேலை கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டுக்கல் நகர் முழுவதும் நடைபயணமும் நடைபெற்றது. எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

வழக்கமாக மக்கள் நலப் போராட்டங்களை முன்னெடுக்கும் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தற்போது அதிக அளவில் போராட்டங்களில் இறங்கியுள்ளது, தேர்தலுக்காக தற்போதே மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர் என்பதையே காட்டுகிறது. எப்படியும் திண்டுக்கல் தொகுதியை திமுக கூட்டணியில் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி கூறியதாவது:

கடந்த தேர்தல்களில் திண்டுக்கல், பழநி தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு தலா 3 முறை எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேடசந்தூர் தொகுதியிலும் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மூன்று தொகுதிகளும் எங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி எனவே மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை கேட்டுப்பெற வேண்டும் என கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். மூன்று தொகுதிகளிலும் முதல் தேர்வு தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்ற திண்டுக்கல் தொகுதிதான். திண்டுக்கல் தொகுதி கிடைக்காவிட்டால் அடுத்த வாய்ப்பாக பழநி தொகுதியை கேட்டு வலியுறுத்துவோம். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, வேட சந்தூர் என மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கண்டிப்பாக பெறுவோம். மற்ற தொகுதிகளில் திமுக வின் வெற்றிவாய்ப்புக்கு பாடுபடுவோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x