Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறையில் அடைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாதவடியான், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: அம்பாசமுத்திரம் தாலுகா கீழாம்பூர் கிராமத்தில் 2004-ல் 3 சர்வே எண்களில் 76 சென்ட் இடம் வாங்கினேன். அந்த இடங்களுக்கு எனது பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் ஒரு சர்வே எண்ணில் எனது பெயரிலும், இரு சர்வே எண்ணுக்கு எனது பெயருடன் வேறு சிலரது பெயரையும் சேர்த்துக் கூட்டுப் பட்டாவாக வழங்கப்பட்டது.
இதைச் சரி செய்து தரக்கோரி சேரன்மாதேவி கேட்டாட்சியரிடம் மனு அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நான் 26.9.2020-ல் அளித்த மேல்முறையீட்டு மனு மீது பட்டா பாஸ்புக் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: பட்டா பாஸ்புக் சட்டப்படி, மனு மீது 120 நாட்களில் முடிவெடுக்க வேண்டும். அதன் மீதான மேல்முறையீடு மனு மீது 90 நாட்களிலும், அதன் மீதான சீராய்வு மனு மீது 60 நாட்களிலும் முடிவெடுக்க வேண்டும். இந்தக் காலக்கெடு அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற வழக்குகளைத் தவிர்க்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அந்த அதிகாரியின் பணிப்பதிவேட்டிலும் குறிப்பிட வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு ஒரு மாதத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அந்தக் காலக்கெடுவுக்குள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது யாராவது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்து, அதை விசாரிக்கும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்தால், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறைக்கு அனுப்ப வேண்டும். அதற்குப் பின்னர்தான் நீதிமன்ற அவமதிப்புச் சட்டப்படி அபராதம் விதிப்பது.
இந்த வழக்கில் மனுதாரரின் மனுவை சேரன்மாதேவி கோட்டாட்சியர் 2 வாரங்களில் தென்காசி கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். தென்காசி கோட்டாட்சியர் 4 மாதத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT