Published : 04 Sep 2020 07:35 AM
Last Updated : 04 Sep 2020 07:35 AM
சென்னையில் வரும் 7-ம் தேதி முதல் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளித்த மத்திய அரசு, வரும் 7-ம்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைதொடங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேநேரத்தில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 22-ம் தேதி நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை, தற்போது மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் மீண்டும் தொடங்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் வரும் 7-ம் தேதியில் இருந்து காலை 8 மணி முதல்இரவு 8 மணி வரையில் மெட்ரோரயில் சேவை இருக்கும். நீல வழித்தடமான சென்னை விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே வரும் 7-ம் தேதிமுதல் ரயில்கள் இயக்கப்படும். அலுவலக நேரமான காலை 8.30 - 10.30 மற்றும் மாலை 5 மணி முதல்இரவு 8 வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அலுவலக நேரம் இல்லாத மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பச்சை வழித்தடமான பரங்கிமலை - சென்ட்ரல் இடையே வரும் 9-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காற்றோட்டத்துக்காக ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் 20 விநாடிகளுக்கு பதிலாக 50 விநாடிகள் மெட்ரோ ரயில் நிற்கும். ஸ்மார்ட் கார்டு மற்றும்க்யூஆர் ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும். லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 3 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும்.
பயணிகள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கபடுவர். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அரோக்கிய சேது செயலியை பதிவிறக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT