Published : 27 Jul 2020 09:24 PM
Last Updated : 27 Jul 2020 09:24 PM
சென்னை தி.நகரில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ. ஒருவர் வங்கிக்கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர்(47). சென்னை ஆயுதப்படை எஸ்.ஐ.ஆக பணியில் இருந்தார். சென்னை தி.நகர் விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று மாலை அதே அலுவலகத்தில் பணியிலிருந்த அவர் திடீரென தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. அதில் வங்கியில் தான் பெற்றிருந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
வேலூர், காட்பாடியைச் சேர்ந்த 1994-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவர் 2007-ல் எஸ்.எஸ்.ஐயாக பதவி உயர்வு பெற்றவர், 2009 முதல் எஸ்.ஐயாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்கிற மனைவியும், 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.
கரோனா பேரிடர் அனைவரும் வாட்டிய நிலையில் வாங்கிய கடனுக்காக கடனை திரும்ப செலுத்த முடியாத மன உளைச்சலில் காவல் அதிகாரியே தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT