Published : 27 May 2014 09:11 AM
Last Updated : 27 May 2014 09:11 AM

ராமதாஸ் மௌன பாபாவா?: மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பி கேள்வி

ராஜபக்சே இந்தியா வருகை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாய் திறக்காதது அவர் மௌன பாபாவாகிவிட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று விமர்சித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

நமது நிருபரிடம் எஸ்ஆர்பி கூறியதாவது:

ராஜபக்சே வருகைக்கு தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. வைகோ நீண்டகாலமாக உள்ள தனது நிலைப்பாட்டுக்கு ஏற்ப ராஜபக்சேவை மோடி அழைத்தது தவறு என்று சுட்டிக்காட்டி, தனது கண்டனங்களையும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பையும் காட்டி கட்சிக்காரர்களோடு கைதாகி யிருக்கிறார். பிரதமர் பதவியேற்பு விழாவிலும் தானும், தன் கட்சியினரும் பங்கேற்பதில்லை என்று அறிவித்துவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவும் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆனால் ஆண்டாண்டு காலமாக இலங்கை அரசையும், ராஜபக்சேவையும், அவருக்கு வேண்டியவர்களையும், அவர்கள் செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்து இலங்கை தமிழர் விவகாரத்தை தனது தொப்புள் கொடி உறவாக சித்தரித்து பேசி வந்தவர் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ஆனால், இப்போது ராமதாஸ் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், மோடி பிரதமர் பதவி ஏற்பில் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வைக்கிறார் என்றால் அது அவரது மகன் அன்புமணிக்கு பதவி கிடைக்க வேண்டும் என்ற ஆசையினால்தானா என்பதை ராமதாஸ் தெளிவுபடுத்த வேண்டும். அவர் மௌனம் காட்டுவதால் மௌன பாபாவாக மாறிவிட்டாரோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x