Published : 19 Jun 2020 08:37 PM
Last Updated : 19 Jun 2020 08:37 PM
கரோனா பேரிடர் பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கான தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கரோனா பேரிடர் பாதிப்பு அதிகரித்த காரணத்தால் ஒரு சில தேர்வுகள் மட்டுமே எஞ்சி இருந்த சூழலில் அவை ஒத்திவைக்கப்பட்டன. ஜூலை 1ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதிக்குள் அந்தத் தேர்வுகள் நடைபெறும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது.
தற்போது பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பள்ளிகள் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தியா முழுவதுமே கரோனா நோய்த்தொற்று வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் மாணவர்களைத் தேர்வு எழுதவைப்பது என்பது அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே, தேர்வுகளை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே எழுதப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலும், அக மதிப்பீடுகளின் அடிப்படையிலும் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னால் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு தேர்வு முடிவுகளை அறிவிப்பது பற்றி சிபிஎஸ்இ பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
ஜூலை மாதத்தில் நடத்தப்படவுள்ள தேர்வுகளை மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையிலும் முற்றாக ரத்து செய்துவிட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
விரைந்து இதில் முடிவு அறிவிக்கப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் மன அழுத்தத்திலிருந்து விடுபட அது உதவியாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT