Published : 05 May 2014 08:53 AM
Last Updated : 05 May 2014 08:53 AM

6 மாதங்களில் புதிய நிலையங்கள் மூலம் கூடுதலாக 2,100 மெகாவாட் மின்சாரம்: தமிழக மின் தட்டுப்பாட்டைப் போக்க மின்வாரியம் தீவிரம்

வரும் 6 மாதங்களில் தமிழகத்தில் கூடுதலாக 2100 மெகாவாட் மின்சாரம் புதிய மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான இறுதிக் கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னையில் வல்லூர் அனல் மின்திட்டத்தில் தலா 600 மெகாவாட் திறன்கொண்ட 3 யூனிட்கள், 9,193 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. இதில் முதல் இரண்டு யூனிட்களில் பணிகள் முடிந்து கடந்த 2012 நவம்பரில் முதல் யூனிட்டும், 2013 ஆகஸ்டில் இரண்டாம் யூனிட்டிலும் வணிக மின் உற்பத்தி தொடங்கியது. 3-ம் யூனிட்டில் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இதேபோல், தூத்துக்குடியில் தமிழக மின்வாரியமும், நெய்வேலி நிலக்கரி மின் நிறுவனம் (என்.எல்.சி.) இணைந்து, 4,909 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு யூனிட்டுகளில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் பணிகள், கடந்த 2007ம் ஆண்டு தொடங்கியதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டுக்குள் வணிக மின் உற்பத்தியைத் தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இதுவரை பணிகள் முடியாமல் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. புதிய நவீன வடிவிலான பாய்லர் அமைப்பதால் உதிரி பாகங்கள் கிடைப்பதில் தாமதமாவதும் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுவதும் தான் தாமதத்துக்கு காரணம் என்று என்.எல்.சி.,அதிகாரிகள், தமிழக மின் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாகவும் வரும் ஜூனில் முதல் யூனிட்டிலும் செப்டம்பரிலும் இரண்டாம் யூனிட்டிலும் வணிக ரீதியான மின் உற்பத்தியைத் தொடங்க முடியும் என்றும் என்.எல்.சி., தரப்பில் மின் வாரியத்திடம் உறுதி அளித்துள்ளனர்.

இதற்கிடையில், வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாம் நிலையில் 600 மெகாவாட் திறனுள்ள இரண்டாம் யூனிட்டுக்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையம் 4,031 கோடி ரூபாய் செலவில் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது. இந்த யூனிட்டில் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருவதால் இம்மாத இறுதியில் அல்லது ஜூனில் வணிக மின் உற்பத்தி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது தமிழகத்தில் 1,500 மெகா வாட் மட்டுமே மின் தட்டுப்பாடு உள்ளது. விரைவில் காற்றாலை சீசன் உள்ளதால் அதிலிருந்து 3,500 மெகாவாட் வரை மின் சாரம் கிடைக்கும் நிலையில், தட்டுப்பா டின்றி மின்சாரம் வழங்க முடியும்.

வடசென்னை இரண்டாம் யூனிட்டில் 600 மெகாவாட்டும், வல்லூர் மூன்றாம் யூனிட்டில் 500 மெகாவாட்டும், தூத்துக்குடி என்.எல்.சி., நிலையத்தில் 1,000 மெகாவாட்டும், மொத்தம் 2,100 மெகாவாட் இந்த ஆண்டுக்குள் கூடுதலாக கிடைக்க உள்ளது.

இதுதவிர பெரியார் வைகை அணையிலுள்ள நீர் மின்நிலையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. எனவே தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மின் வாரியத்தால் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x