Published : 07 Jun 2020 06:58 PM
Last Updated : 07 Jun 2020 06:58 PM

லால்குடி பகுதியில் மான், காட்டுப்பன்றி வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது

லால்குடி அருகே மான் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள முள்ளால் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மதி. இவர் தச்சங்குறிச்சி வனப்பகுதியில் அடிக்கடி வேட்டையில் ஈடுபடுவதாக மாவட்ட வன அலுவலர் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் வனத்துறையினர் நேற்று இவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு காட்டுப்பன்றி, அதன் குட்டியை வேட்டையாடி, அவற்றின் கறியை விற்பனைக்காக தயார்படுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மதியை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்திய வலைகள் உள்ளிட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல லால்குடி அருகே ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த சிலர், மான் வேட்டையில் ஈடுபட்டு, அதன் கறியை சமைத்து சாப்பிட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அந்த கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தி அம்மாசி மகன் செந்தில் (45), பெரியசாமி மகன்கள் கதிரேசன் (34), கண்ணன் (29), சீரங்கன் மகன் பாலு (43), கோவிந்தசாமி மகன் சுரேஷ் (36), அங்கமுத்து மகன் சிங்காரவேலு (58) ஆகியோரை வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மான் தோல், மான் கொம்புகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x