Published : 26 Apr 2020 07:09 AM
Last Updated : 26 Apr 2020 07:09 AM

2021 மார்ச் வரை உணவு தானிய இருப்பு உள்ளது- இந்திய உணவு கழகத் தலைவர் டி.வி.பிரசாத் தகவல்

சென்னை

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில், வர்த்தகம் போன்றவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் அன்றாட தேவைக்கு உணவு பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உணவு தானிய இருப்பு அளவுக்கு மீறி வைத்திருப்பதாகவும், குறைந்த விலையில் அல்லது இலவசமாக மாநிலங்களுக்கு உணவுப் பொருட்களை அரசு வழங்க முன்வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு விமர்சனங்கள் இது தொடர்பாக எழுந்துள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய உணவுக் கழகத் தலைவர் டி.வி.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

தற்போதுள்ள நெருக்கடியான கால கட்டத்தை சமாளிக்கும் வகையில் உணவு தானிய இருப்பு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில்2021-ஆம் ஆண்டு மார்ச் வரை உணவுப் பொருட்கள் தேவையைச் சமாளிக்கும் வகையில் இருப்பு உள்ளது. ஆனால், தேவைக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

வழக்கமான விதிமுறைகள்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் நபர் ஒருவருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வீதம் 80 கோடி பேருக்கு வழங்கும் வகையில் இருப்பு திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நெருக்கடி கால கட்டம் என்பதால் இந்த விதிமுறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தற்போது பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் கூடுதலாக 5 கிலோ ஒதுக்கப்படுகிறது. எனவே அதற்கேற்ப இருப்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

தற்போது அரிசி 284 லட்சம் டன்னும், கோதுமை 280 லட்சம் டன்னும் இருப்பு உள்ளது. இதில் மேற்சொன்ன திட்டங்களின்படி ஏப்ரல்-ஜூன் வரை 200 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும். மேலும் இருப்பை நிலையாக வைத்திருப்பதற்கான உபரி இருப்பும் போதுமானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கொள்முதல் நடவடிக்கைகளும் திட்டமிடப்பட வேண்டும்.

மாநிலங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. மாநிலங்கள் தரப்பிலிருந்தும் போதுமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு டி.வி.பிரசாத் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவது தொடர்பான கோரிக்கைக்கு மத்திய அரசுதான் கொள்கை ரீதியான முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x