Published : 10 Mar 2020 08:11 AM
Last Updated : 10 Mar 2020 08:11 AM

தேனாம்பேட்டை அருகே சுரங்கப் பாதையில் மின்கம்பி அறுந்ததால் மெட்ரோ சேவை பாதிப்பு

தேனாம்பேட்டை - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னையில் 2 வழித்தடங் களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலக நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையும், மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவையும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், தேனாம்பேட்டை - சின்னமலை இடையே சுரங்கப் பாதையில், மெட்ரோ ரயில் இயக்குவதற்கான மின்சாரம் விநியோகம் செய்யும் உயர் அழுத்த மின்கம்பி நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென அறுந்து விழுந்தது.

இதையடுத்து, ரயில் இயக்க கட்டுப்பாட்டு அறைக்கு மெட்ரோ ரயில் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். கம்பி அறுந்து விழுந்த இடத்துக்கு விரைந்து வந்த தொழில்நுட்ப ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மெட்ரோ ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பிறகு, இந்த தடத்தில் ஒரு வழிப்பாதையாக மட்டும் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு பிறகு வழக்கம்போல ரயில்கள் இயங்கத் தொடங்கின.

தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x