Published : 05 Feb 2020 08:25 AM
Last Updated : 05 Feb 2020 08:25 AM
தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக பட்ஜெட் இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, துறைவாரியான ஆய்வுக்கூட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கினார்.
இந்நிலையில், பால்வளத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்குவது, ஆவின் பால் கொள்முதல், ஆவின் உற்பத்தி பொருட்களை தமிழகத்திலும் வெளிமாநிலத்திலும் விற்பனை செய்வது, நஷ்டத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
கலப்படம் இருக்கக்கூடாது
கூட்ட முடிவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘பால் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றி, ஏற்றுமதி செய்யும் பாலின் அளவையும் அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாலில் கலப்படம் இருக்கக்கூடாது என்றும், பண்ணைகள், பதப்படுத்தும் இடங்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தனியார் பால் கலப்படம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவன பால்களும் ஆய்வு செய்யப்படுகிறது. தீவனம்மூலம் கலப்படம் செய்யப்படுவதைத் தடுக்க, விவசாயிகளுக்கு விரைவில் அரசு இடம் வழங்கும். அதில் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி தீவனத்தை உற்பத்தி செய்யலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT