Published : 04 Feb 2020 06:17 PM
Last Updated : 04 Feb 2020 06:17 PM
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு இன்று மக்களவையில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு மையத்தை மாற்றும் முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நேரமில்லா நேரத்தின்போது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு மையம் கடந்த 2003-ம் ஆண்டு திமுக முன்னணித் தலைவர் மறைந்த முரசொலி மாறன் முயற்சியாலும், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆதரவுடனும் சென்னையில் அமைக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த கட்டிடத்தில் அமையப்பெற்ற அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு மையம் டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை சட்டங்களின் கீழ் பதியப்படும் வழக்குகளில் மேல்முறையீட்டைத் தீர்த்து வைப்பதில் திறம்படச் செயலாற்றி வருகின்றது.
தற்போது சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு மையத்தை வட இந்தியப் பகுதிகளில் மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. உடனடியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தலையிட்டு இந்த மையத்தினை சென்னையில் தொடர முயற்சிகள் எடுக்க வேண்டும், என மக்களவையில் டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT