Published : 01 Jan 2020 10:58 AM
Last Updated : 01 Jan 2020 10:58 AM

மூக்கைப் பிடித்துக்கொண்டு பயணிக்கும் நிலை; ரயில்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ்

ரயில் பயணத்தை மகிழ்ச்சியானதாகவும், மலர்ச்சி ஆனதாகவும் மாற்றும் அளவுக்கு பயணிகளுக்கான வசதிகளை ரயில்வே துறை செய்து தர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜன.1) வெளியிட்ட அறிக்கையில், "ரயில் பயணிகள் கட்டணம் புத்தாண்டு முதல் கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 40 பைசா, அதாவது 77% வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், கட்டண உயர்வு மிகவும் குறைவாக இருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.

இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சாதாரண ரயில்களில் ஏசி வசதி இல்லாத வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா, விரைவு வண்டிகளில் இதே வகுப்புகளுக்கு இரு பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளன. விரைவு ரயில்களில் ஏசி வசதி கொண்ட வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசாக்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 66 விழுக்காடு பயணிகள் பயன்படுத்தும் புறநகர் ரயில்களுக்கு கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயிலின் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது என்பதுதான் பாமகவின் நோக்கம் ஆகும். அதை மனதில் கொண்டுதான் பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை இணை அமைச்சர்களாக இருந்த காலங்கள் உள்ளிட்ட 11 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2012 வரையிலான காலத்தில் பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக, ஒரு முறை கட்டணம் குறைக்கப்பட்டது.

எனினும், கடந்த 5 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது; ரயில்வே துறையின் இயக்கச் செலவுகள் அதிகரித்திருப்பது ஆகிய காரணங்களாலும், சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் ரயில்களில் அதிகபட்ச கட்டண உயர்வு ரூ.10 தான் என்பதாலும் அதிக பாதிப்புகள் இல்லாத இக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதேநேரத்தில் ரயில் கட்டணம் எந்த அளவுக்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி எழுகிறது. ரயில் நிலையங்களில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்த போதுதான் செய்து தரப்பட்டன. ரயில் நிலையங்கள் அழகுபடுத்தப்பட்டதும் பாமக அமைச்சர்கள் இருந்த காலத்தில் தான்.

ஆனால், இன்றைய நிலையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை என்பது பெரும் பற்றாக்குறையாக உள்ளது. ரயில் பெட்டிகளில் எலிகள் ஓடும் அளவுக்குதான் அவற்றின் பராமரிப்பு உள்ளது. கழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பல நேரங்களில் பயணிகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு பயணிக்கும் அளவுக்கு நாற்றம் அடிக்கிறது.

அதேபோல் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்யப்படவில்லை. இக்குறைகள் அனைத்தையும் களைந்து ரயில் பயணத்தை மகிழ்ச்சியானதாகவும், மலர்ச்சி ஆனதாகவும் மாற்றும் அளவுக்கு பயணிகளுக்கான வசதிகளை ரயில்வே துறை செய்து தர வேண்டும்.

இவை தவிர, டைனமிக் கட்டணம் என்ற பெயரில் ரயில் கட்டணத்தை விமானக் கட்டணத்தை விட கூடுதலாக உயர்த்தும் முறை நியாயமற்றதாகும். இந்த முறையில், அண்மையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான கட்டணமாக ரூ.2,440 வசூலிக்கப்பட்டுள்ளது. இது இயல்பான கட்டணத்தை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும். இதுவும் ஒருவகையான சுரண்டல் தான் என்பதால், இம்முறையை முற்றிலுமாக கைவிட ரயில்வே துறை முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x