Published : 09 May 2014 12:22 PM
Last Updated : 09 May 2014 12:22 PM
நாட்டுக்கு சேவையாற்றுவதே தனது லட்சியம் என்று பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி கூறினார்.
தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி, 1,200-க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் முதலிடம் வகித்துள்ளார். சுஷாந்தியின் தந்தை சிவப்பிரகாசம், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியராக இருக்கிறார்.
மாணவி சுஷாந்தி கூறும்போது, "மாநிலத்தில் முதலிடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிரியர்கள், பெற்றோரின் ஊக்குவிப்பே வெற்றிக்கு காரணம். குறிப்பாக, என் பாட்டியின் உறுதுணையை மறக்க முடியாது.
தமிழில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களில் நானும் ஒரு மாணவி என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்த வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
நான் மருத்துவராக வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பம். அதன்படி, மருத்துவம் படிப்பேன். பிறகு, சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி, ஐ.ஏ.எஸ் ஆகி நாட்டுக்கு சேவையாற்றுவதே என் லட்சியம்" என்றார் சுஷாந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT