Published : 22 Aug 2015 12:07 PM
Last Updated : 22 Aug 2015 12:07 PM
அகால மரணமடைந்த இருவர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தொப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் பவானிசாகர் நகரியம் பகுதி, மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனப் பண்ணையில் 12.5.2015 அன்று இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோயம்புத்தூர் நகரம், ஆர்.எஸ்.புரம் மயானப் பகுதியில் தோண்டப்பட்டிருந்த, மழை நீர் தேங்கியிருந்த குழியில் 16.5.2015 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர் ராஜேந்திரன் கால் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT