Published : 19 Aug 2015 08:27 AM
Last Updated : 19 Aug 2015 08:27 AM

குடிநீர் வாரிய அதிகாரியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் மனு

கொளத்தூர் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சந்திர மோகனிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் மனு அளித்தார்.

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அவர், ‘பேசலாம் வாங்க’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். கடந்த 16-ம் தேதி நடைபெற்ற பேசலாம் வாங்க நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘கொளத்தூர் தொகுதியில் இதுவரை 16 முறை மக்களை நேரில் சந்தித்து 2,000 புகார் மனுக்களை பெற்றுள்ளேன். அதில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மட்டும் 500 மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு அனுப்பினோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. எனவே, அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சந்திரமோகனை ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றல் பிரச்சினைகள் தொடர்பாக கொளத்தூர் தொகுதி மக்கள் அளித்த 230 மனுக்களை அவரிடம் அளித்து, நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x