Published : 04 Nov 2019 05:39 PM
Last Updated : 04 Nov 2019 05:39 PM
சென்னை
சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்போம் என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் எச்சரித்துள்ளார். ஆன்லைன் விற்பனையும் கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஏழுகிணறைச் சேர்ந்த கோபால் குமார் தனது மகன் அபிநவ் ஷராப் மற்றும் மனைவியுடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் பாலத்தின்மீது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் குழந்தை அபிநவ் உயிரிழந்தார்.
சென்னையை உலுக்கிய இந்த விவகாரத்தில் ஆர்.கே நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து , 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் நாகராஜ் என்கிற நபரையும் கைது செய்தனர். சட்டவிரோதமாக மாஞ்சா நூலை விற்பனை செய்தது யார் என்று தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர்.
மாஞ்சா நூல் விற்பனை குறித்து சோதனை நடத்தி குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை முழுவதும் 15 தனிப்படைகளை போலீஸார் அமைத்துள்ளனர். காவல் ஆணையர் உத்தரவின்பேரில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலம் பகுதியில் இணை ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவருடன் துணை ஆணையரும் சென்றார்.
சிறுவன் உயிரிழப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் கூறுகையில், “தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் யாரேனும் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாஞ்சா நூல் வைத்து பட்டம் விடுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் . ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்கப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணாடித் துகள், வஜ்ரம் போன்ற பொருட்களை வைத்து தயார் செய்யப்பட்டவையே மாஞ்சா நூல் என்றும், ஆன்லைனில் மாஞ்சா என்ற பெயரை மட்டும் பயன்படுத்தி நூல்கள் விற்கப்படுகின்றன. ஆனாலும் ஆன்லைனிலும் சட்டவிரோதமாக மாஞ்சா நூல் விற்கப்படுவது தீவிரமாகக் கண்காணிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT