Published : 31 Oct 2019 03:40 PM
Last Updated : 31 Oct 2019 03:40 PM

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததை ரத்து செய்யக் கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்த மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநில சட்டப்பேரவையின் அனுமதி பெறாமல் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், காஷ்மீரைப் போல பிற மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களாகச் சுருக்கும் அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் அச்சம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களை அம்மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், யூனியன் பிரதேமாக மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக் கூறியுள்ள மனுதாரர், மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சிக் கொள்கைக்கு விரோதமாக இயற்றப்பட்ட இந்த சட்டத்திற்குத் தடை விதித்தது செல்லாது என அறிவிக்கக் கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? இல்லையா? என்பது குறித்து, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீரைப் பிரித்தது போல தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

காஷ்மீரைப் போல தமிழகத்தைப் பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது எனவும், யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை எனவும், யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதால் கூட்டாட்சிக் கொள்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், ஏற்கெனவே இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில் இந்த மனுவை இன்று (அக்.31) தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மனுதாரர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல என்பதாலும், இதே போன்ற வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x