Published : 07 Aug 2019 02:49 PM
Last Updated : 07 Aug 2019 02:49 PM
சென்னை
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தால் தென்மேற்குப் பருவக்காற்று வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில், மிக கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 41 செ.மீ. மழையும், மேல்பவானியில் 22 செ.மீ. மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு மற்றும் வால்பாறையில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசுவதால், அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்".
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT