Published : 22 May 2014 02:35 PM
Last Updated : 22 May 2014 02:35 PM
பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ள விவகாரத்தில், மோடி தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்காமல் பாஜக தவிர்த்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி, மே 26-ல் பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து திமுக செய்தி தொடர்பாளரும், திமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவனும் இன்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "தமிழக மக்கள் உணர்வுகளை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையால் தமிழக மக்கள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றனர்.
சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கலாம். இருந்தாலும், இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT