Published : 29 May 2014 10:40 AM
Last Updated : 29 May 2014 10:40 AM

பிளாட்பாரத்தில் தூங்கியவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை: சென்னையில் மீண்டும் சைக்கோ கொலையாளி கைவரிசை?

வடபழனி அருகே பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர் தலையில் கல்லைப் போட்டு மர்ம நபரால் கொலை செய்யப் பட்டுள்ளார். இதனால் சென்னையில் மீண்டும் சைக்கோ கொலையாளி கைவரிசையை காட்ட தொடங்கியிருக் கிறாரோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

சென்னை வடபழனி பேருந்து நிலையம் அருகே ஆற்காடு சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் போஸ்(55) என்பவர் செவ்வாய்க் கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வந்த மர்ம நபர் ஒருவர், அருகே இருந்த பெரிய கல்லை எடுத்து போஸின் தலையில் போட, சம்பவ இடத்திலேயே போஸ் பலியானார். தலை உடைந்து ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த அவரது உடலை இரவில் ரோந்து சென்ற காவல் துறையினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போஸின் தலையில் கல்லை போட்டு கொன்றவர் யார் என்ற விவரம் இதுவரை கிடைக்க வில்லை. இதுகுறித்து வடபழனி காவல் துறை ஆய்வாளர் பழனிசெல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.

மர்மமான முறையில் இறந்த போஸ், வடபழனி பேருந்து நிலையத் தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் வழக்கமாக அந்த இடத்தில்தான் தூங்குவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிளாட்பாரங்களில் தூங்கிய 6 பேர் தலையில் கல்லை போட்டு மர்மமான முறையில் கொல்லப் பட்டனர்.

இவர்களில் இரண்டு பேர் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி கள், இரண்டு பேர் பிச்சைக்காரர்கள். இந்த கொலைகளை சைக்கோ கொலையாளி ஒருவர் செய்வதாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பவங்களால் பிளாட்பாரங்களில் தூங்குவதற்கே பலர் அஞ்சினர். இரவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்ற பலரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடியும் கொடுத்தனர். ஆனால் அந்த கொலைகள் தொடர்பாக காவல் துறையினர் யாரையும் கைது செய்ய வில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிளாட்பாரத்தில் தூங் கிய பிச்சைக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கோ கொலையாளி மீண்டும் கைவரிசையைக் காட்ட தொடங்கி விட்டானோ என்ற பீதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x