Published : 09 May 2014 09:25 AM
Last Updated : 09 May 2014 09:25 AM

தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் மழை நீடிக்கும் வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஞாயிற்றுக் கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த பகுதியாக உள்ளது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தென் கேரள கடற்கரையோரத்திலிருந்து வடக்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்கிழக்கு அரபிக் கடலில், வட கேரளம் அருகே உள்ளது. இது மேலும் தீவிரமாகி வட கிழக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 13 செ.மீ. மழை பெய்தது. சிதம்பரம், குன்னூர் ஆகிய இடங்களில் 12 செ.மீ., கமுதி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 11 செ.மீ., கொடவாசல், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையோரத்தில் கடல் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x