Published : 31 May 2014 10:43 AM
Last Updated : 31 May 2014 10:43 AM

பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து உடனடி தீர்வு

பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்படும் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடந்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

பத்திரிகைகளில் தினமும் வெளியிடப்படும் செய்திகள் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் கணினியிலேயே சேமிக்கப்பட்டு வருகின்றன.

அந்தச் செய்திகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பிவைத்து, அதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான போட்டோ ஆதார நகல்கள், மேயர் அலுவலகத்தில் மாதந்தோறும் புத்தக வடிவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த முறையில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் குறைகளை ஆன்லைனிலேயே பதிவு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி தொடர்பான செய்திகள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆன்லைன் மூலமாகவும், குறுந் தகவல் மூலமாகவும் அனுப்பப் படும். இந்த திட்டம் சோதனை முறைப்படி வியாழக்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் புகார்களின் நிலவரம் குறித்து பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம். இந்த நடைமுறை இன்னும் ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x