Published : 10 May 2014 09:08 AM
Last Updated : 10 May 2014 09:08 AM

காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது: மீண்டும் வெயில் அதிகரிக்கும்

வட கேரளத்துக்கு அருகேயிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து தெலங்கானா பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்து வெயில் அதிகரிக்கும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. அது கன்னியாகுமரிக்கும் கேரளத்துக்கும் இடையே நிலை கொண்டிருந்தது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மழை பெய்தது.

தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவிழந்து கர்நாடகாவின் உட்பகுதிகள் வழியாக சென்று தெலங்கானா பகுதியில் உள்ளது. எனவே தமிழகத்தில் மழை குறைந்து வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். எந்த மாவட்டத்திலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

கத்தரி வெயில் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் மழை பெய்து, வெயிலின் உக்கிரத்திலிருந்து மக்களை காப்பாற்றியது. தற்போது மீண்டும் வெயில் 105 முதல் 110 டிகிரி வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் குந்தா பாலத்தில் 11 செ.மீ., கேத்தி, குன்னூர், தேவலா ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 9 செ.மீ., பேச்சிப்பாறையில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் நாகர்கோவிலில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x