Published : 05 May 2014 10:43 AM
Last Updated : 05 May 2014 10:43 AM

தமிழக இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை: நிரந்தர தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் வாசன் வேண்டுகோள்

இலங்கையில் வரும் 12-ம் தேதி நடக்கவுள்ள இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் நிரந்தர தீர்வு ஏற்பட தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றிருந்த ஜி.கே.வாசன், ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்திலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், வரும் 12-ம் தேதி, இலங்கை கொழும்பு நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் இலங்கை மற்றும் தமிழக மீனவர் பிரதிநிதிகளும், இரு நாட்டு அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மீனவர் பிரச்சினையைத் தீர்க்க, தமிழக அரசு முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.

மத்தியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் 3-வது அணியை காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கேட்கிறீர்கள். கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. அது போல இந்த முறையும் முதல் அணியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x