Published : 06 May 2014 08:00 AM
Last Updated : 06 May 2014 08:00 AM
குண்டு வெடித்ததும் அதில் இருந்து பறந்த சிதறல்கள் ஸ்வாதியின் இதயத்தை துளைத்ததால்தான் அவர் மரணம் அடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் இருந்து கடந்த 1-ம் தேதி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஸ்வாதி (24) பலியானார். 14 பேர் காயம் அடைந்தனர்.
திருமண கனவுகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்ட ஸ்வாதி, சதிகாரர்கள் வைத்த வெடிகுண்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரித்தபோது நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்தன.
குண்டுவெடித்த இரண்டு பெட்டிகளில் எஸ்.4 பெட்டியின் ஜன்னல் ஓரத்தில் உள்ள 28-வது எண் இருக்கை (லோயர் பெர்த்) ஸ்வாதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே 30-ம் எண் இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.
குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததும் அதில் இருந்து பறந்து வந்த பால்ரஸ் குண்டு சிதறல்கள் மற்றும் ரயிலின் இரும்பு துண்டு சிதறல்கள் ஸ்வாதியின் நெஞ்சை கிழித்து உள்ளே புகுந்து இதய வால்வுகளை வெட்டியுள்ளது. வால்வுகளில் காயம் ஏற்பட்டதால் இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடைபட, அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் ஏற்பட்டு ஸ்வாதி மரணம் அடைந்திருக்கிறார்.
ஸ்வாதியின் உடலை டாக்டர்கள் பிரேதப் பரிசோதனை செய்த போது, அவரது இதயம் அருகே சுமார் ஒன்றரை லிட்டர் ரத்தம் உறைந்து இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT